விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அம்மாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ஆடிமாத அமாவாசை தினமான நேற்று திங்கள்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் பெரியபாளைய பவானி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் நள்ளிரவு 10.30 மணி அளவில் பெரியபாளைய பவானி அம்மன் அலங்காரத்தில் உள்ள உற்சவர் மேல்மலையனூர் அங்காளம்மனை கோவிலின் வடக்கு வாயில் வழியாக பூசாரியில் தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.
அப்போது பக்தி பரவசமடைந்த பக்தர்கள் ஓம் சக்தி.. அங்காளம்மா தாயே... அருள்புரிவாயே.. என பக்தி பரவசமடைந்து கையில் சூடம் ஏற்றி சாமி ஆடி அம்மனை தரிசனம் செய்தனர்.
நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சகணக்காண பக்தர்கள் வருகை தந்து சாமிதரினம் செய்தனர்.
இந்த முறை பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றம் திருக்கோயில் நிர்வாகம் இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
0 கருத்துகள்