விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் அம்மாவாசை தோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் வைகாசி மாத அமாவாசை தினத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்த நிலையில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்க பணம், தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை எண்ணும் பணி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் ,விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம் , திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி மற்றும் வடிவேல் பூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பக்தர்கள் உண்டியலில் நேர்த்திக் கடனாக செலுத்திய ரொக்க பணம், தங்கம் மற்றும் வெள்ளி இனங்களை எண்ணினர்.
வளத்தி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிவில் 58 லட்சத்து 75 ஆயிரத்து 351 ரூபாய் பணமும், தங்கம், 270 கிராம்,வெள்ளி 485 கிராம் இனங்களும் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்